இன்றைய செய்திகள்

பின்வரும் செய்திகள் அனைத்தும் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட செய்தி தொகுப்பு ஆகும் (நன்றி - செய்திகள் தந்த அனைவருக்கும்)
-------------------------------------------------------------------------------------------
டிரைடன்ட் ஹோட்டலின் 16வது மாடியிலிருந்து குதித்து ரஷ்யர் தற்கொலை

மும்பை: மும்பையில் உள்ள டிரைடன்ட் ஹோட்டலில் இன்று ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர் மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான டிரைடன்ட் ஹோட்டல் சமீபத்தில்தான திறக்கப்பட்டது.
பல மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலின் 16வது தளத்திலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் அலெக்சாண்ட்ர என்ற ரஷ்ய நாட்டவர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் ஹோட்டலின் நீச்சல்குளப் பகுதியில் காணப்பட்டது.
--------------------------------------------------------------------------------------
பந்த்தின்போது சிறிதளவும் வன்முறை கூடாது: பழ. நெடுமாறன்

இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு, அப்பாவி தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 4-ந் தேதி பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிப்ரவரி 4ம் தேதி நடத்தப்படும் பொது வேலைநிறுத்தத்தின்போது சிறிதளவும் வன்முறை நிகழ்ந்து விட இடம் தரக் கூடாது என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------அமெரிக்காவுக்கு ஒபாமாவின் 819 பில்லியன் டாலர் பேக்கேஜ்!

வாஷிங்டன்: இனி வரும் மாதங்கள் அமெரிக்காவுக்கு பெரும் சோதனைக் காலமாகவே இருக்கும் என அந்நாட்டின் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
படுபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும், அமெரிக்கப் பொருளாதாரத்தை நிமிர்த்த பல்வேறு சலுகைகளை அறிவிக்கத் தயாராகி வருகிறார் பாரக் ஒபாமா. முதல் கட்டமாக மிகப்பெரிய தொகையை (819 பில்லியன் டாலர்கள்) பல்வேறு துறைகளுக்கும் நிதிச் சலுகையாக அளித்து, முடங்கிக் கிடக்கும் தொழில்களை மீண்டும் இயங்க வைக்கத் திட்டமிட்டுள்ளார்.
------------------------------------------------------------------
சாயல்குடியில் குடிநீர் பஞ்சம் - குடம் ரூ.4க்கு விற்பனை

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடம் தண்ணீர் ரூ. 4க்கு விற்கப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சாயல்குடி பகுதியில் சமீபத்தில் நல்ல மழை பெய்தும் கூட எந்த கண்மாயும் நிரம்பவில்லை. இதனால் கிணறுகளில் நீர்மட்டமும் உயரவில்லை.
இந்நிலையில் சாயல்குடி டவுனில் குடிநீர் ஊரணியோ, பேரூராட்சி கட்டுப்பாட்டில் போர் வசதியோ செய்து தரவில்லை.

ராஜகம்பீரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குடிநீரும் சாயல்குடி நகர் பகுதிக்கு சரிவர வருவதில்லை. நரிப்பையூரின் உப்பு நீரை நண்ணீராக்கும் திட்டத்தின் மூலம் வரும் தண்ணீரையும் பொதுமக்கள் குடிநீராக பருகுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் சாயல்குடி டவுனில் குடிநீர் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது.

இந்நிலையில் ஆற்றுப்பகுதியில் இருந்து டிராக்டர் மூலம் எடுத்துவரப்பட்ட குடிநீர் ரூ.4க்கு ஒரு குடம் என்ற முறையில் விற்பனை செய்யப்படுகிறது
-----------------------------------------------------------------------
ஹாக்கி: இந்திய வெற்றியை தடுத்தது நெதர்லாந்து - போட்டி டிரா

பஞ்சாப் தங்க கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இப்போட்டியில் இந்தியாதான் வென்றிருக்க வேண்டும். ஆனால் இந்திய வீரர்கள் செய்த கடைசி நேரத் தவறால் நெதர்லாந்து போட்டியை டிரா செய்து விட்டது.

சண்டிகரில் பஞ்சாப் தங்க கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. முதல் லீக் போட்டியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
நேற்று இரண்டாவது போட்டியில் இந்திய அணி, வலிமை மிக்க நெதர்லாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியா ஆட்ட நேரம் முடிய சிறிது நேரத்திற்கு முன்பு வரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெறும் தருவாயில் இருந்தது.

ஆனால், 2வது பாதி ஆட்டத்தின்போது இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. ஆனால் அதை கோலாக்க தவறினார் இந்திய கேப்டன் சந்தீப் சிங்.
இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட நெதர்லாநது வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி கடைசி நேரத்தில் இரு கோல்களடித்து 4-4 என்ற கோல் கணக்கில் போட்டியை டிராவில் முடித்து விட்டனர்.

இந்தியா சார்பில் சிவேந்திரா சிங் 2 கோல் அடித்தார். பிரபோத் சிங், எஸ்.வி. சுனில் தலா ஒரு கோல் அடித்தனர்.
------------------------------------------------------------------------
நாகேஷ் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல்

நகைச்சுவைத் திலகம் நடிகர் நாகேஷ் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கலைத் துறையில் புகழ் பெற்ற சிறந்த குணச்சத்திர நடிகரான நாகேஷ் இன்றைய தினம் (31-1-2009) இயற்கை அடைந்த செய்தினை அறிந்து பெருந்துயருற்றேன்.
தனிச்சிறப்பான நகைச்சுவையாலும் பல திறப்பட்ட நடிப்பாற்றாலும், தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவர் அருமை நண்பர் நாகேஷ்.

தனிப்பட்ட முறையில் என்னிடம் மாறாத அன்பும், பாசமும் கொண்டவர். தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் பேராதரவையும் மதிப்பையும் பெற்றவர்.
நாகேசின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
------------------------------------------------------------------------------
நாகேஷ் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது: ஜெ.

நாகேஷ் விட்டுச் சென்றுள்ள இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. அவரது மரணம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பழம்பெரும் திரைப்பட நகைச்சுவை நடிகரும், நாடக நடிகருமான நாகேஷ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.

நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல், கதாநாயகன், குணசித்திரம், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று திறம்பட நடித்தவர்.
அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள் ஆகும்.

அவரது இழப்பு திரைப்பட துறைக்கு மிகுந்த பேரிழப்பு ஆகும். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. நாடு ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டது.
நாகேஷினை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். - விஜய்யின் 50வது படம்!

வெளிப்படங்களை இயக்க நிறைய அழைப்பு வந்த போதும் மறுத்து வந்த ஜெயம் ராஜா முதல் முறையாக விஜய்யை வைத்து இயக்குகிறார்.

இப்போது அந்தச் செய்தியை ஜெயம் ராஜாவே உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

இதுவரை என் தம்பி ரவியை மட்டுமே வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்த நான் முதல்முறையாக விஜய்யை வைத்து ஒரு படம் இயக்குகிறேன் என்பது உண்மைதான். அது விஜய்யின் 50-வது படமா என்று எனக்குத் தெரியாது.

ஆனால் இது ரீமேக் அல்ல. ஒரிஜினல் ஸ்கிரிப்ட்தான். விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும், என ராஜா தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை தயாரிப்பவர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரன்.
போக்கிரிக்குப் பிறது அடுத்தடுத்து (அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு) ஹாட்-ட்ரிக் தோல்விப் படங்களாக அமைந்துவிட்டதால், தனது பாக்ஸ் ஆபீஸ் இமேஜை தக்க வைத்துக் கொள்ளும் நெருக்கடியில் உள்ள விஜய், இந்தப் படத்துக்கு தேர்வு செய்துள்ள தலைப்பு எம்ஜிஆர் என்கிறார்கள்.
-----------------------------------------------------------------------------
சென்னை எச்.பி.சி.எல். கிடங்கில் தீ விபத்து - பெரும் சேதம் தவிர்ப்பு

சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின், கிடங்கில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், ரூ.1 கோடி மதிப்பிலான ஆயில் கேன்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னை கொருக்குப்பேட்டையில் மத்திய அரசின் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு உள்ளது.சென்னை துறைமுகத்திற்கு, கப்பல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அது மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பிரித்து எடுக்கப்பட்டு இங்கு சப்ளைக்கு வருகிறது.

இங்கு தினமும், தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு சுமார் 400 டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் எடுத்து செல்லப்படுகின்றன.

இங்கிருந்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 9.50 மணிக்கு லுப்ரிகண்ட் சேமிப்பு கிடங்கில் தீப்பற்றி கொண்டது.

இதையடுத்து அங்கு வேலையிலிருந்த அதிகாரி ராஜூ அருகிலிருந்த பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இதில் 3 தீயணைப்பு வாகனங்களும், 15 மேற்பட்ட மெட்ரோ தண்ணீர் லாரிகளும் பயன்படுத்தப்ட்டன.ஆயில் பொருட்கள் தீப்பிடித்ததால் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால், `பார்ம்' என்ற ரசாயணத்தை தண்ணீருடன் சேர்த்து, அதன் மூலம் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் பெட்ரோல் டேங்க் வெடிக்கப்போவதாக வதந்தி பரவியது. இதனால் உயிருக்கு பயந்த சிலர் வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.இந்த தீவிபத்தில் சுமார் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள ஆயில் கேன்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டதால், அருகில் உள்ள பெட்ரோல் கேன்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

4 comments:

Anonymous said...

thanks for publishing the news crisply. if you will continue doing this. your site will become a default site.

thanks

Ravi said...

Gopi, I enjoyed reading your comment on idlyvadai's post on Muthukumar's self-immolation. Happy to note that there are still people like you who can distinguish real issues to psycophancy. Thanks!

R.Gopi said...

நண்பர் ரவி அவர்களுக்கு

தங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வரவும். வாசிக்கவும். தங்கள் மேலான கருத்துக்களை தெரியபடுத்தவும்.

R.Gopi said...

அனானி அவர்களே

தங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள். தகவல்களை பாருங்கள். உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்