2009 – 2010 சிறப்புப் பார்வை – (பகுதி – 2)

கலைத்துறைக்கு அதுவும் திரைத்துறைக்கு நம் தமிழ் நெஞ்சத்தில் சீரிய சிம்மாசனம் உண்டு. கடந்து வந்த வருட்த்தின் சில துளிகளை பார்ப்போமே...

· ஆஸ்கார் சாதனை: இசைப் புயல் ரகுமான், ஒலி மேதை ரசூல் பூக்குட்டி என களம் இறங்கி நம் ”ஆஸ்கார் விருது” ஏக்கத்தை தணித்தார்கள். 52 வருடங்களாய், முட்டி மோதி கிடைக்காத்து, இந்த வருடம் தென்னகத்துக்கு சொந்தமாக்கி கொண்ட நிகழ்வு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது... நாம் விழாவில் எட்டிப்பார்த்து கொட்டாவி விட்ட காலம் போய், இப்போது நம் கதவு தட்டி ஆஸ்கார் விருது தரும் காலம் கனிந்து வந்திருக்கிறது.

· இங்கிலாந்தின் மிக பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான “பிக் பிரதர்” போட்டியில் பல்வேறு நாட்டை சேர்ந்த பல போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி, வெற்றி பெற்று லண்டன் மக்களின் அங்கீகாரத்தை தனதாக்கி நம் எல்லோரையும் பெருமை பட வைத்தார் ஷில்பா ஷெட்டி... இந்த சாதனை படைத்த கையோடு திருமணம் செய்து கொண்டார்...

* அக்கட பூமியில் வெளிவந்த சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடித்த “மகதீரா” என்ற சரித்திர படத்திற்கு நல்ல வசூல் மகசூல்... ஒச்சாயி பாட்டி காலத்து ஓராயிரம் முறை கேட்ட புராண கதையை லேட்டஸ்ட் க்ராஃபிக்ஸில் குழைத்து கொடுத்து பார்ப்பவர்களை பரவசப்படுத்திய ”அருந்ததி” என்ற படமும் பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையை கிளப்பியது... கூடவே அதன் தமிழ் டப்பிங் வடிவம் தமிழ்நாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியது...

இவ்விட சேர நாட்டில் மம்மூட்டி நடிப்பில், பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான “பழசிராஜா” படம் வசூலில் தூள் கிளப்பியது... இதில் சரத்குமாரின் வேடமும், நடிப்பும் நன்றாக பேசப்பட்டது... ஆனால், அது அவரின் தமிழ்ப்படமான “ஜக்குபாய்” ரிலீஸுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை... (இத்தனைக்கும் சூப்பரா இருக்காம்.... ஆந்தையார், கழுகார் நியூஸுங்கோ.....)

ஹாலிவுட்டில் தயாராகி வசூல் சாதனை படைத்த, படைத்து கொண்டிருக்கும் ”2012” மற்றும் ஜேம்ஸ் கேமரூனின் மெகா பட்ஜெட் படம் ”அவதார்” வெளியானது இந்த 2009 ஆண்டில்தான்... அதிலும் அவதார் படம் மெகா வசூலிலும், விஷுவலாக 3D யிலும் கலக்குகிறது.... ”அவதார்” படத்தின் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் யுவராஜ்சிங் போல 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து விட்டார் என்கிறது உலக பாக்ஸ் ஆஃபீஸ் ரிப்போர்ட்....

* குறைந்த பட்ஜெட்டில், எளிமையான திரைவடிவத்தில், தரத்தில் உயர்ந்து வெளிவந்த படங்கள் சில பட்டையை கிளப்பின. இத.... இத .... இதத்தான் நாங்க எதிர்பார்த்த்தோம் என சினிமா ரசிகன் வசூலில் வக்கணையாச் சொன்னார்கள். உன்னைப் போல் ஒருவன், பசங்க, நாடோடிகள் .............. படங்களை பார்த்து...

* என்னைப்பாரு, என் பட்ஜெட்ட பாரு, என் படத்த பாரு, வசூல்ல பிச்சிக்கும் பாரு”, என டகால்டி விட்டு, மிகுந்த பொருட் செலவில் தயாரான “வில்லு” “குருவி”, “தோரணை”, “கந்தசாமி” ”வேட்டைக்காரன்” போன்ற எதிர்பார்க்கப்பட்ட படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் பிச்சுக்கும் என களத்தில் நின்றவர்கள், அடிச்ச ஆடிக்காத்துல உச்சி குடுமி பிச்சிக்கிட்டு போச்சு. படங்கள் பப்பரப்ப என்று சொல்லி பப்படம் ஆனது. எதுவும்னா, அட மெய்யாலுமே எதுவுமே மிஞ்சலியாமே... அதிலும், ஒரு படத்தோட நடிகர் படம் ரிலீஸான 3வது நாளே படம் இமாலய வெற்றி, இதுவரை எந்த படமும் காணாத வெற்றி என்று பத்திரிக்கைகள கூப்பிட்டு சொன்னது, கோவில் படத்தில் வடிவேல் சிலம்ப சண்டையில் வெற்றி பெற்றதாக சொன்னதை போல் இருந்தது... இந்த நகைச்சுவை காட்சி பிரமாதமாக இருக்கும்... நேரம் கிடைக்கும் போது பார்த்து மகிழுங்கள்... அப்போது, அந்த நடிகர் சொன்னதையும் நினைத்து பார்த்தால், டபுள் கிச்சு கிச்சு உத்தரவாதம்...

அயன், ஆதவன் என்ற இரண்டு படங்களிலும் வெற்றி பெற்று ஒப்பனிங் ஓவரில் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர் விளாசிய வீரேந்திர சேவாக் போல், வெற்றி வீரனாய் வலம் வருகிறார் சிவகுமாரின் மூத்த புதல்வர் சரவணன் அலையஸ் சூர்யா... இந்த இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து முறுக்கிய மீசையோடு ஹரி டைரக்‌ஷனில் “சிங்கம்” என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்...
இது தவிர 2009 ஆம் வருடம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் “எங்கள் ஆசான்” மற்றும் “மரியாதை” , சரத்குமார் அவர்கள் நடிப்பில் “1977” போன்ற டெர்ரர் படங்களும் ரிலீஸ் ஆகி நம்மை திகில் அடைய செய்தது...


( வாசகருக்கு ஒரு புதிர் போட்டி: அருகில் காணப்படும் படத்தில் ஏதாவது தவறு தெரிகிறதா.... விடை : இறுதி பத்தியில்)

வரும் ஆண்டை வரவேற்ப்போம்.
2010 ஆம் ஆண்டின் எதிர்பார்ப்பு நீண்ட நெடுங்காலம் அரசியலில் பணியாற்றி, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாய் அறிவித்த மூத்த அரசியல் தலைவர் டாக்டர் கலைஞருக்கு பாராட்டும் பூமாலையும். இனி அவர் ஓய்வில் இருக்கும்போது, கதை வசனம் எழுதும் காவியங்கள் ”பொன்னர் சங்கர்”, பெண் சிங்கம்” போன்றவை வரிசையாய் வரிசையில் (இந்த வார்த்தை கரெக்டா??!!) நிற்கும்.... அந்த கலை படைப்புகளுக்கு தார்மீக ஆதரவு தரும் மாபெரும் பொறுப்பு 2010 ஆம் ஆண்டில் நமக்கு இருக்கிறது...

சிலருக்கு பிடிக்கல என்றாலும் உண்மை இதுதானே. ரஜினியின் புதிய படமான ”எந்திரன்” (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) ரீலீஸ் (ஏப்ரலில் இல்லையென்றால், கண்டிப்பாக ஜூன் மாதத்தில்) உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தமாக படத்தில் பங்கு கொள்ளும் அத்துணை பெயர்களின் மிக கடின உழைப்பில் உருவாகும் இந்த படத்தின் மூலம் தமிழ் படங்களுக்கு உலகளாவிய அளவில் மார்க்கெட்டும், பெயரும், புகழும், வியாபாரமும், பணமும், வீச்சும், நம் கோடம்பாக்கத்தை தேடி வரப் போகிறது. “சிவாஜி” படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றி கூட்டணி, இந்த “எந்திரன்” படத்தின் மூலம் அகில உலகையும் திரும்பி பார்க்க வைக்கும் என நம்புவோம்... “எந்திரன்” வெற்றி பெற வாழ்த்துவோம்.

கூடவே சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் ஹீரோ அனிமேஷன் படமான “சுல்தான் தி வாரியர்” படமும் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்ப்போம்... அனிமேஷன் படம் என்பதால், சாத்தியப்படும் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்ய ஏதுவாகும்...

இந்தியாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பு மற்றும் டைரக்‌ஷனில் வெளிவர இருக்கும் “ராவண்” என்ற மும்மொழி படம் (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது...

சராசரி சினிமா ரசிகனாய் செல்வாவின் ஆயிரத்தில் ஒருவன், சௌந்தர்யா ரஜினியின் “கோவா”, மிஷ்கினின் நந்தலாலா ஆகிய படங்களை எதிர்பார்ப்போம். நம்மை குஷிப்படுத்தும் என விஷ்ஷூவோம்.

இது தவிர மிருக சம்பந்தப்பட்ட தலைப்புகளை கொண்ட பல படங்கள் வரவிருக்கின்றன... உதாரணமாக “சுறா” மற்றும் “சிங்கம்”... அதனால, இந்த படம் நேஷனல் ஜியாக்ரஃபி சேனலில் ஒளிபரப்புவார்களா என்று “நக்கல் நாகமணி” கேட்ட கேள்விக்கு நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...
ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி... (நன்றி நண்பர் சூப்பர் சுந்தர் (www.onlyrajini.com) )

சிவாஜி தி பாஸ் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது, ”சிவாஜி தி பாஸ்” படத்தின் ஹிந்தி பதிப்பை உலகெங்கும் ஜனவரி 8ம் தேதி 2010 அன்று வெளியிடுகிறது... ”அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே” பாடலில் தமிழின் ஜாம்பவான் நடிகர்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை இமிடேட் செய்து நடித்த ரஜினிகாந்த், இதன் தெலுங்கு பதிப்பில் பிரபலமான தெலுங்கு நடிகர்களை (என்.டி.ராமாராவ், ஏ.நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி) இமிடேட் செய்து நடித்திருந்தார். அந்த பாடலின் வீடியோவை இங்கே பார்த்து ரசியுங்கள் : http://www.youtube.com/watch?v=hD916uVydqI&feature=related ஹிந்தி பதிப்பிலும் பிரமலமானவர்களை இமிடேட் செய்து நடித்திருக்கிறார்... அது சஸ்பென்ஸாக உள்ளதால், அதை பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள்...

நல்ல திரைப்படைப்புக்கள் வந்து நம்மை குஷிப்படுத்தட்டும், திரை வியாபாரமும் தளைக்கட்டும் என வாழ்த்துவோம்.

(புதிர் விடை : நிர்வாக இயக்குனர், தன் போர்டில் கை வைத்தால் பிசினஸ் பிச்சிக்கும்)

நன்றி !! வணக்கம்.

2009 – 2010 சிறப்பு பார்வை – (பகுதி 1)

நம்மோடு இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருந்த வருசம் 2009 நம்மிடம் விடை பெற்று, நான் போயிட்டு வர்ரேன், என் தம்பி 2010 வர்ராறு, அவர் ரொம்ப நல்லவரு, வல்லவரு.

நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்கும்னு, கையிலிருக்கிற உடுக்கையை ஆட்டி, குறி சொல்லிட்டு போறார்.

தோழமையே!! ஒவ்வொரு வருடமும் மிக நல்லா இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தானே நாம் ஆரம்பிப்போம். வரும் 2010 வருடமும் வளமான வாழ்வை தர அந்த ஆண்டவனை மனதார வேண்டுகிறோம். தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கும் எங்களின் மனங்கனிந்த 2010 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கடந்து சென்ற 2009 ஐ பொது, அரசியல், சினிமா எனும் அடிப்படையில் பார்த்து முக்கிய நிகழ்வுகளை அசை போடுவோம்.

பொது

* வங்கியின் முதல்வர்கள், அரசியல் முதல்வர்கள், பொருளாதார மேதைகள் தொடங்கி பொட்டி கடைக்காரர் வரை பயந்து கால் நடுங்கி இந்த ரிசஷன் எப்பப்பா சரியாகும்! அடுத்த ஆறு மாசத்தில சரியாகுமா என கவலை பட வைத்தது. தொடங்கியது என்னவோ போன வருடத்தின் இறுதி என்றாலும், துள்ளிக் குதித்து குத்தாட்டம் போட்டது இந்த வருடந்தான். இந்த ஜிஞ்சினக்கா சிக்கா... சிக்கா ஆட்டம் நிக்க இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகும் எனும் அஜால்குஜால் ஆரூர்தாஸின் ஆருடம் தான் ஈரக் குலைய பதற வைக்குது.

*நம்மாளு விஞ்ஞானி வெங்கட ராமகிருஷ்ணன் இயற்பியலுக்காக வாங்கிய நோபல் பரிசு, இவரு எங்காளுய்யா என நம் அனைவரையும் காலரை தூக்கி விட வைத்தது.

* சத்தமில்லாம செஞ்ச டகால்டி வேலைகள் வெளியில் தெரிந்ததாலும், 26/11 மும்பை மேட்டருக்கு பின் அமெரிக்கா சப்போர்ட் செய்வதிலிருந்து சற்றே பின்வாங்கியதாலும்,, உலக நாடுகள் கொஞ்சம் உன்னிப்பாய் பார்த்ததாலும், பலவீனமான, லேசா அசந்தாலும் கால் வாருகிற அரசியல் அமைப்பினாலும், அண்டை நாடு பாகிஸ்தான் கொஞ்சம் அமுக்கி வாசித்தது. அந்தப்புறம் “சீனா” சீண்டிப்பார்க்கிறது... இந்தப்புறம் ”இலங்கை” பிரச்சனை தீராமல் இருக்கிறது... (இது நிரந்தரமாக தீர வேண்டும் என்பதே நம் அனைவரின் அவா....).

அரசியல்

* குடும்பத்துக்குள்ள குத்து வெட்டா இருக்குது, ஒட்டவே ஒட்டாது, என ஆருடம் சொல்லப்பட்ட முக்கிய கட்சி, மிகவும் வெற்றிகரமாய் பாகப்பிரிவினை செய்து, இன்னும் கொஞ்ச காலத்துக்கு சுமுகமா ஒடும் என்பதாய் தீர்க்கப்பட்டது. டிவி யாவாரம் எங்கனயும் போப்புடாது, எல்லாக் காசும் எங்களுக்கே எனும் செல்ல தத்துவத்தில் , இரண்டாவதிலும் இவர்களே.

சேனல் வரிசையின் இரண்டாவது இடம் வேறு யாருக்கும் போய்விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இப்போது, இவ்விடமும் பல சேனல்கள் புதிது புதிதாய் முளைக்க துவங்கியுள்ளது. இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி கூட, மக்கள் அதை அங்கீகரித்ததாகவே தெரிகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு ஸ்பெக்டரமுமாய் (வண்ணமுமாய்) வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது மெய்யாலுமே, அசுர வளர்ச்சிடா யப்போய்ய்ய்ய்ய்ய்...... அதுவும் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் மு.க.வின் யுக்தி நல்ல பலன்களை தந்தது... நோட்டை நீட்டி, வோட்டை பெற்று, நாட்டை பிடித்து, ஆட்டையை போடு என்ற நல்லெண்ணம் தான், வேறென்ன நல்ல நினைப்பு இவர்களுக்கு...

* புரட்சித்தலைவர் வென்றெடுத்த மு.க. எதிர்ப்பு எனும் சக்தியை, ஒருங்கிணைக்கத் தவறி, பொது மக்களின் நம்பிக்கையை பெற தவறியதால், எக்ஸாம் ஸ்கூட் அடிக்கும், தேர்தலை புறக்கணிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு கொடநாட்டில் ரெஸ்ட் எடுக்கறோமுங்கோ ரெஸ்ட் என்று சொல்லி ரெஸ்டோ ரெஸ்ட் என்று முடங்கியது.... இந்த முடங்கலே தோல்விக்கு வழிவகுத்தது... (நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர், நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்று புரட்சி தலைவர் பாடினார் என்பதை அம்மையாருக்கு யாராவது ஞாபகப்படுத்தினால் தேவலை... (பாடல் எழுதியவர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்).

* ஹேய்.. லெப்ட்ல போ, அப்பாலிக்கா ரைட்ல போ, இல்லென்னா நேர போ என மூத்த அரசியல் கழகங்களின் கண்ணில் விரல் விட்டு ஆட்டின, மாம்பழக் கட்சி, தேர்தல் தோல்வியில் மக்கள் மற்றும் கழகங்களின் ஆதரவை ஒரே நேரத்தில் இழந்து மோட்டுவளை பார்த்து கொண்டு அடுத்து என்ன செய்யுறதுன்னு தீவிர ஆலோசனை.

* எதிர்கால தமிழகம், வருங்கால விடிவெள்ளி, இளைய தலைமுறைத் தலைவன், என அதிரடியாய் களம் இறங்கிய முரசு, கொஞ்சம் கொஞ்சமாய் வால்யூம் குறைந்து, நிறைய அடி வாங்கி (முடியல..... என்று அலறுவது காதில் கேட்குதா!!) லேசாக தெளிந்து, நேற்றைய நிலவரம் படி டெபாசிட்டை தானம் செய்தது.

* தொலைக்காட்சியின் அரசி என் மனைவி, இத்தனை நாள் அரசியல் அனுபவம், நான் மிஸ்டர் மெட்ராஸ் வேற, 20 மொழி எனக்கு தெரியும், நம்மகாந்த் வளர்ச்சி எல்லாம் பார்த்து, நான் டாஸ்மாக் இல்லை, பாஸ்
மார்க் என கொடி ஏத்திய குமாரன், பாவம் காற்றில் விட்ட கோட்டையை நினைத்து கன்னத்தில் கை வைத்து இருக்கிறார். கழகத்தில கூப்பிடுவாங்களா என காதை காத்து வாக்கில் வைத்திருக்கிறார். இன்னும் ”ஜக்குபாய்” வேற ரிலீஸ் ஆகல... யாரும் வாங்கல... கடை விரித்தேன் கொள்வாரில்லை கதை தான் இங்க....

• ஜனங்களே நல்லா கேட்டுக்கோங்க, நாங்கள் தான் 2011ல் பிரதமர், அதில்லயா நாங்கதான் முதல்வர் என்று அடித்து கூறிய “தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி” நடிகரும், வளவள, கொழகொழ என்றே எப்போதும் பேசும் ”நவரச சிங்க நடிகரும்”, வடிவேல், விவேக் போன்ற காமெடியன்களுக்கு சவால் விடுவதாய் பஞ்ச் டயலாக்ஸ் பேசி நம்மை கிச்சு கிச்சு செய்தார்கள்...

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

தொடரும்....

இதன் தொடர்ச்சி/ இறுதி பகுதி நாளை பதிவேறும் . வந்து படித்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.
தொடரும் பகுதி - சுடச்சுட ஒரு சினிமா கண்ணோட்டம்.