தைலாபுரம்..கோபாலபுரம்..சந்தர்ப்பவாத கூட்டணி கிச்சு கிச்சு

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுக்கும் சேர்த்து சில விஷயங்களை ஞாபகப்படுத்தவே இந்த பதிவு... பதிவிற்கு செய்தியளித்த தினமலர் நாளிதழுக்கு நன்றி சொல்லி, பதிவிற்குள் செல்வோம்.
***************
"துரோகம்... துரோகம்... பச்சைத் துரோகம்' என, தி.மு.க., தலைவரை விமர்சித்த அதே வாய், இன்று, "மீண்டும் மகத்தான வெற்றி பெற்று ஆறாவது முறை தமிழக முதல்வராக வருவார் கருணாநிதி' என்கிறது. இரு தரப்பு விமர்சனங்கள் ஏராளம். அவற்றில், நினைவில் நின்றவை மட்டும் இங்கே.

* ஆட்சியைத் தக்கவைக்க, காங்கிரசின் தயவு வேண்டும் என்பதால், இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார். - ராமதாஸ், 25.3.2009
* இலங்கைத் தமிழர் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி மாற்றி மாற்றி பேசுகிறார். இருப்பது ஓர் உயிர். அது, இலங்கைத் தமிழர்களுக்காகப் போகட்டும் என்றார். பின்னர், "மத்திய அரசு நினைத்தால், இலங்கைத் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றலாம். இல்லையென்றால், இங்குள்ள தமிழர்களும் சாக வேண்டியது தான்' என்றார். அதிலிருந்தும் பல்டியடித்து, "இலங்கைத் தமிழர் பிரச்னையில் இதை விட அதிகமாக செய்வதற்கு எதுவும் இல்லை' என்கிறார். - ராமதாஸ், 11.4.2009
* இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறும் ராமதாஸ், மத்திய அமைச்சரவையில் தன் மகனை இன்னும் நீடிக்கச் செய்வது ஏன்? பதவியை ராஜினாமா செய்துவிட்டு இதையெல்லாம் பேசியிருந்தால், ராமதாஸ் நேர்மையானவர் என கருதலாம். - கருணாநிதி, 16.4.2009

* தமிழக முதல்வர் கருணாநிதி டில்லி சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் முன் அமர்ந்து, இலங்கைப் போரை நிறுத்தும்படி வலியுறுத்தியிருக்க வேண்டும். மாறாக, பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதெல்லாம் கண் துடைப்பு வேலை. - அன்புமணி, 22.4.2009

* லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 40க்கு, 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். தேர்தல் முடிந்ததும், தமிழக அரசியலிலும், தி.மு.க., ஆட்சியிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். - ராமதாஸ், 27.4.2009

* பஸ் கட்டணக் குறைப்பு என்பது, இதற்கு முன் கேள்விப்பட்டிராதது. லோக்சபா தேர்தலை ஒட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ள முதல்வர் கருணாநிதியும், போக்குவரத்து அமைச்சர் நேருவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். - ராமதாஸ், 3.5.2009

* லோக்சபா தேர்தல் வருவதால், இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களை ராமதாஸ் ஏமாற்றுகிறார். அவருக்கு இந்தத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். - ஸ்டாலின், 7.5.2009

* டாஸ்மாக் நிறுவனம், 12,300 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குவதாக, தி.மு.க., அரசு சொல்கிறது. அது, ஏழைகளிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம். - ராமதாஸ், 9.1.2010

* குடிசை மாற்று வாரியம் என்பது, குடிசைகளை ஒழித்து, அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, 1967ம் ஆண்டு தி.மு.க., அரசால் உருவாக்கப்பட்டது. ஆனால், சென்னை இன்னமும் குடிசைகளின் நகரமாகத் தான் இருக்கிறது. - ராமதாஸ், 9.1.2010

* தி.மு.க., - அ.தி.மு.க., என எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கத் தயாராக இல்லாததால், விரைவில் பா.ம.க., என்ற கட்சியே காணாமல் போய்விடும். - ஸ்டாலின், 19.1.2010

* வாக்காளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வினியோகிக்கும்போது தி.மு.க.,வினர் கையும், களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர். அப்படியும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். - ராமதாஸ், 27.2.2010

* தி.மு.க.,வுடனான கூட்டணியில் மீண்டும் இணைய நாங்கள் விரும்புகிறோம்; ராஜ்யசபா சீட் ஒன்றை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். - ராமதாஸ், கடிதம்

* வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தான் ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்படும். - தி.மு.க., தீர்மானம், 30.5.2010

* தன்னைத் தானே சமூக நீதி போராளி என அழைத்துக்கொள்ளும் கருணாநிதி, ஜாதிவாரி கணக்கெடுப்புக்குத் தயாராக இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. - ராமதாஸ், 26.8.2010

* புராணங்களில் குரு என்றழைக்கப்பட்ட சுக்கிராச்சாரியார், நல்லவற்றை நடக்கவிடாமல் தடுத்து வந்தார். (காடுவெட்டி ) குரு என்றால் அது தான் அர்த்தம். - கருணாநிதி, 5.9.2010

* இந்தியாவிலேயே அதிகம் இளம் விதவைகள் இருப்பது தமிழகத்தில் தான். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் வரை இந்நிலை தான் தொடரும். - ராமதாஸ், 8.1.2011

* காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. - கருணாநிதி, 30.1.2011

* கூட்டணி குறித்து பா.ம.க., இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழைப்பு வருகிறது. - ராமதாஸ், 30.1.2011

* பா.ம.க., இருக்கிறது என்று நாங்கள் சொன்னபோது, அவர் மறுத்தார். இனி, கூட்டணி பற்றிய கேள்விக்கே இடமில்லை. - கருணாநிதி, 1.2.2011

* பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க சோனியா விரும்பவில்லை. டில்லியில் அவர் என்னிடம், "எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது' என்றார். - கருணாநிதி, 3.2.2011

* தி.மு.க., - பா.ம.க., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். - ராமதாஸ், 17.2.2011

(நன்றி : தினமலர்)