தகிக்கும் பாலைவனம் - இங்க 50௦ டிகிரி வெயில் எல்லாம் ஜுஜூபி....



மத்திய கிழக்கு நாடுகளில் வெயில் காலம் என்பது மிக கொடுமையானது... அதுவும், குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.ஈ.யின் தலைநகரமான அபுதாபி எண்ணெய் வளம் மிக்க பகுதி - யு.ஏ.ஈ..உலகின் ஐந்தாவது அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு என்று படித்த ஞாபகம்...) போன்ற எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும்.

பீக் சம்மர் எனப்படும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், மதியம் 12 மணிக்கு மேல் வெய்யில் 50௦ டிகிரியை தாண்டுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணம். நான் வேலை செய்து கொண்டிருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யு.ஏ.ஈ), பீக் சம்மர் எனப்படும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட மதிய உணவு இடைவேளை நேரம் அறிவிக்கப்பட்டு விடும்...

ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான அந்த இரண்டு மாதங்களுக்கு எப்போதும் அளிக்கப்படும் இடைவேளையை விட கூடுதல் நேரம் ஒதுக்கி அரசாங்கம் ஆணை பிறப்பிக்கும்... அதற்கு ”சம்மர் மிட்டே ப்ரேக்” என்று பெயர்...

பொதுவாக இரண்டு மாதங்களுக்கு (ஜூலை-ஆகஸ்ட்) அளிக்கப்படும் அந்த இடைவேளை நேரம் (மதியம் 12.30௦ முதல் ௦03.00௦௦ மணி௦௦ வரை), இந்த ஆண்டின் கடுமையான வெயில் தாக்கத்தை மனதில் கொண்டு மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது... அதாவது 15ம் தேதி ஜூன் முதல் 15ம் தேதி செப்டம்பர் வரை...

எப்போதும் இல்லாதது போல், இந்த ஆண்டு ஜூன் மாத ஆரம்பத்திலிருந்தே வெயிலின் கடுமை மிகவும் உக்கிரமாக உள்ளது... ஏர் கண்டிஷனர்கள் இருந்தும், அந்த வெப்பத்தின் தாக்கத்தை உணர முடிகிறது... தினமும் வெய்யில் 50௦ டிகிரியை சுலபமாக தாண்டுகிறது... நேரடியாக வெயிலில் பணிபுரியும் தொழிலாளிகள் வெயிலின் கொடுமை தாங்காது, ஆங்காங்கே நிழலில் தங்கி இருப்பதை காணும் போது, மனதுக்கு கஷ்டமாக உள்ளது...

அதிலும், ரோடு வேலை செய்யும் தொழிலாளிகள் படும் பாடு, சொல்லி மாளாது... நம்மூர் போல, நிழலுக்கு ஒதுங்க பெரிய அளவிலான மரங்கள் கூட இங்கு இல்லை... (அது போன்ற சாலையோர நிழல் தரும் மரங்கள் இப்போது நம்மூரிலேயே இல்லை என்பது வேறு விஷயம்...).

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம், இவர்களுக்கு வேலை செய்யும் கம்பெனி சரியான ஓய்வு கொடுக்கிறதா என்பதை அதிகாரிகளை வைத்து தொடர்ந்து கண்காணிக்கும்..அரசின் ஆணையை மீறும் கம்பெனிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதாக முன்பு அரசாணையை மீறிய கம்பெனிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் இருக்கும் எந்த கம்பெனியும் இதற்கு விதிவிலக்கல்ல....சமீபகாலமாக உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும், ஆட்டிப்படைக்கும் ”க்ளோபல் வார்மிங்” என்பதன் அர்த்தத்தை சரியாக உணர்ந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது...

ஆகவே, நாம் அனைவரும் இதுவரை காட்டி வந்த அலட்சிய போக்கை கைவிட வேண்டும். சிறு சிறு அலட்சியமே பின்னாளில் பெரிய அழிவிற்கு வழிவகுக்கும்... இது நாம் கண்கூடாக பலமுறை கண்டுள்ளோம்... ஒரு பெரிய கப்பலில் விழும் சிறு ஓட்டை தான், கவனிக்காமல் விட்டால் அந்த பெரிய கப்பலையே மூழ்கடிக்கும்... நம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு, ஆங்காங்கே மரம் நடும் வழக்கத்தை மேற்கொள்ளலாம்...
குறைந்த பட்சம், நாம் வாழும் வீட்டில், சில மரங்களை நடலாம்.. நம்மால் வெட்டப்படும் மரங்களே, இயற்கை நமக்கு அளிக்கும் கொடையான ஆண்டு மழை வரத்தை குறைக்கிறது... எப்போது, வருடா வருடம், நமக்கு கிடைக்கும் அந்த பருவ மழை பொய்ய்க்காமலிருக்க, நாம் நம்மாலான முயற்சிகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்...ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டாமல், பாதுகாப்போம்... இயற்கை தரும் வரமான மாமழையை பெற முயற்சிப்போம்... முயற்சி திருவினையாக்கும்.... முயன்றால் முடியாதது எதுவுமில்லை... பசுமையான நம் நாட்டை, நாமே பாலைவனமாக்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்வோம்...

நல்ல விஷயங்களை நாளும் மனதில் கொண்டு, அதை பின்பற்றி வாழ்ந்தால், நம் வாழ்வு சிறக்கும்... வசந்தமாகும்..
நான் எழுதிய இந்த கட்டுரையை தொடர்ந்து, யு.ஏ.ஈ.யின் முன்னணி ஆங்கில நாளேடான “கல்ஃப் நியூஸ்” இன்று (22 .06 .2010) வெளியிட்டு இருக்கும் செய்தியை படிக்க இங்கே க்ளிக்குங்கள்....