மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம்- (பாகம் - 4)

(நான்காம் பகுதி பதிப்பதில் உள்ள தாமதத்திற்கு வருந்துகிறேன்.
இனி தொடர்ந்து வரும், வாருங்கள்). ஐந்தாம் பாகம் விரைவில் ............

மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 4)

விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வந்தாச்சு. கிரிச்சிட வந்து நின்ற சாலையில் உயரமாய் அந்த குடியிருப்பு. பளபளக்கும் கண்ணாடி சுவர்கள், வானை முட்டும் உயரம். ஐம்பது மாடி, நூறு மாடி எல்லாம் இங்கே ரொம்ப சாதாரணம்.

இங்கா நாம் குடி இருக்க போகிறோம். மனது ஒரு குத்தாட்டம் போடும். ஓலை கூரைகளையும், ஓட்டு வீடுகளையும், அரிதாய் காணும் மச்சு வீடுகளையும் பார்த்த கண்களுக்கு தீப்பெட்டி அடுக்கி வைத்தது போலே உள்ள இந்த கண்ணாடி கோபுரங்கள் பெரும் பிரமிப்பு தரும்.

அது மக்கள் குடியிருக்கும் ஒரு பகுதி. சாலையில் நிறைய மனிதர்கள்.
இந்தியர்கள் பெரும்பாலும் பரவலாக காணப்பட்டார்கள். குறிப்பாக கேரளத்தை தவிர மத்திய கிழக்கு நாடுகள் எங்கும் நிறைந்து இருக்கும் மலையாளிகள் நிறைய. இவர்களை பற்றி தான் நம் எல்லோருக்குமே தெரியுமே, என்பதால் கண்ணில் பட்ட மற்றவர்களை பற்றி பாப்போம். சுத்தி முத்தி எல்லாரோயும் நோட்டம் விட்டு லேசாய் பார்ப்போம்.

தொள தொள பாவடை போலே உடை அணிந்து - அழுக்காய்... குளித்து முகம் சவரம் செய்தால் அட்டகாசமாய் இருப்பான் என்பதாய் சில பாகிஸ்தானியர்கள், கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாமல் காலைக்கடன் கழிக்கும் அதே நிலையில் - பாதம் நிலத்தில் பட குத்த வைத்து உக்காந்து இருந்தார்கள். இவனக்கு மட்டும் எப்படி இது சுலபமா இருக்கு என்று கேள்வி வரும். நமக்கு எல்லாம் ஐந்து நிமிடம் உட்கார்ந்தாலே கால் மரத்து இடுப்பு புடிச்சிகிதே.

சிக்கென்று சீமான் போலே உடை அணிந்து மஞ்சளாய் சில பிலிப்பினோக்கள் (பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள்). ஒடுங்கிய தேக அமைப்பு. மூக்கு மட்டும் கொஞ்சம் சப்பை. படைத்து விட்டு ... ஆஹா நல்லா இருக்கே என்று இறைவன் முகத்தை அழுத்தி பிடித்திருப்பாரோ என்று தோன்றுகிறது

உரக்க ஒலிக்கும் எம்.பி.த்ரீ-யோடு எனக்கும் இந்த உலகத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பதாய் அந்த பிலிப்பினோ சகோதரர்கள் சகோதரிகள். எல்லாம் நல்லது தான். அவன் சமைக்க ஆரம்பித்தா எட்டு ஊர் நாறும். நடப்பது, மிதப்பது, பறப்பது என்று எதை கொடுத்தாலும் சாப்பிடுவான். அவனுக்கு நம்மை (இந்தியர்களை) அவ்வளவு பிடிப்பது இல்லை. சுத்தக் குறைவு, மேனி பராமரித்தால் சரி இல்லை என்று ஆயிரம் காரணம் சொல்லுவான்.

அவன் மொழியில் ஆங்கில லிபிகளே. படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஆங்கில எழுத்துக்களே. சுருக்கமாய் சொன்னால் நாம் கூட அவன் மொழி எழுத வாசிக்க முடியும், ஆனா அர்த்தம் மட்டும் ... அஸ்கு புஸ்கு தான். அவன் ஆங்கில ஐம்பத்தி ஐந்தை (55) பிப்டி ப்பை என்று சொல்லும் அழகு கேட்கும் போது நாக்கை இழுத்து வைச்சு வசம்பு தேய்க்கலாமோ என்று தோன்றும்.

எளிதில் உணர்ச்சி வசப்படும் கூட்டம். சட்டென கோபப்பட்டு விடுவார்கள். பக்கத்திலே போனா கடிச்சு வைச்சிருவான் என்று யாரும் அவ்வளவு பக்கத்தில் போனது இல்லை. எதுக்கு வம்பு !!!

ஓங்கு தாங்காய் கோதுமை நிறத்தில் அரபி மொழி பேசும் சில அண்டை நாடு காரர்கள். வாய தொறந்தா மூடுறது கஷ்டம். சும்மா பேச சொன்னா கைய கால நீட்டி ஒரு கரகாட்டமே ஆடுவான். கைய காலை கட்டி போட்டுட்டு பேச சொன்னா அவனால முடியாதுன்னே தோணுது.

எண்களை கண்டுபிடித்து எங்களுக்கு சொன்னதும், உருவாக்கி கணிதத்துக்கு கொடுத்ததும், மம்மி என்று சடலத்தை பிரித்து மேய்ந்து புதைத்தும் ஆன இந்த புத்தி சாலி பரம்பரையா இவர்கள் என்று ஆச்சரியம் மேலோங்கும். இன்று அவர்கள் புத்தி கூர்மை அவ்வளவு இல்லையே ஏன் என்று கேள்வியும் உடன் வரும்.

கொஞ்சம் உஷாரா இத்த கேளுங்க. உங்கள பார்த்த உடனே பக்கத்திலே வந்து மூஞ்சி கிட்ட குனிஞ்சி மூக்கோட நுனிய வைச்சி உங்க மூக்கு நுனிய தேய்ப்பான். தப்பா நினைக்காதீங்க அந்த நாட்டு பழக்கம் அது.

அப்புறம் தொடங்குவான் அவன் கூத்தை. இந்த அரபி கலாச்சாரத்திலே இது ஒரு நொம்பலம். யாரு எப்போ எங்கே பேச தொடங்கினாலும் உடனே பேச மாட்டாங்க.

வணக்கம்....
நல்லா இருக்கியா ....
வேலை எப்படி இருக்கு....
இப்படி குலம் கோத்திரம் விசாரிச்ததுக்கு அப்புறமா தான் பேச ஆரம்பிப்பான்.

வீட்டுள்ளே அடங்கி ஒடுங்கி இருக்காம என் இப்படி எல்லா பயலும் வெளிய நிக்கிறான் என்று ஒரு கேள்வி. அதற்கு விடை தர நாம் மெல்ல நகர்ந்து குடியிருப்பின் உள்ளே செல்ல வேண்டும்.

வாருங்கள். ...................