இந்தியாவில் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்!

இந்திய பொதுத் தேர்தலோடு பெரும் சோதனையும் சேர்ந்தே வருகிறது. ஆம்.. இந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 10 மில்லியன் மக்கள் அதாவது ஒரு கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி 22 சதவிகிதம் குறைந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த அளவு மேலும் கூடக் குறையலாம். எனவே இப்போதே 400 க்கும் மேற்பட்ட உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இவற்றில் பணியாற்றிய 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்துவிட்டனர். மேலும் 5 லட்சம் பணியாளர்கள் வேலை இழக்கும் வகையில் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன. 40 லட்சம் முழுநேர / பகுதி நேர தொழிலாளர்கள் ஏற்கெனவே வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பணியில் இருப்பதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

"இதுவும்கூட இன்னும் சில மாதங்கள் வரைதான். எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் முடிந்தவரை எங்கள் தொழிலாளர்களை காப்பாற்றவே முயல்கிறோம். குறைந்த சம்பளத்துடனாவது அவர்களை வைத்திருக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அதற்குக் கூட வழியில்லாத அளவுக்கு ஏற்றுமதி குறைந்துவிட்டது. உள்நாட்டில் சப்ளை செய்யலாம் என்றால், இங்கே வெளிநாட்டுப் பொருட்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. என்ன செய்வதென்றே புரியவில்லை.

பெரும்பாலான நடுத்தர மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள கார்மென்ட்ஸ் தொழில் முழுவதுமாக படுத்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது, என்று அகில இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அபாயத்தை நன்கு உணர்ந்துள்ளதாகவும், இதைத் தடுக்க முடிந்தவரை அதிக நிதி உதவி அளித்து வேலை இழப்பைத் தடுக்க முயற்சிப்போம் என்றும் மத்திய நிதித்துறைச் செயலாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

No comments: