
ஊருல இப்ப சொன்னாங்க ஒரு மேட்டரு, நீங்களும் கேளுங்களேன், தண்ணியில இருந்து ஏன் மின்சாரத்த எடுக்குறாங்கன்னு கேட்க, நம்ம சயிண்டிஸ்ட் சகலை சகாதேவன் சொல்றார். எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சுருமில்ல.... அதுக்குத்தான். மேட்டர கேட்டதும் நமக்கே ஷாக்கா இருக்குல்ல....
ஒரு சாதனையாளரின் வாழ்வு, அதனுடன் தொடர்புடைய தகவல்கள், அதில் இருந்து நாம் எடுத்துக்கொள்ள ஒரு மேட்டர், எனும் இலக்கில் பயணிக்கிறது நம் வெற்றியின் விழுதுகள். முந்தைய அத்தியாயம் சொன்ன சாணக்கியரின் வாழ்வு, பிரச்சனையின் ஆழச்சென்று, தீர்வுக்கு வழி காண்பதையே நமக்கு பாடமாய் சொல்கிறது. சரி இனி அம்பேத்கர் வாழ்ந்ததைப் பற்றி வால்யூம் கூட்டி “மெல்லிய சத்தத்தில்” கேட்போமே.
நீதி உயர்ந்த மதி கல்வி, அன்பு நிறைய உடையவர் மேலோர்
இந்தியாவின் மத்தியில் மேவா பகுதி, இறுபுறமும் மலைகள் உயர்ந்து நிற்க, குறுகிய இரு மலைகளின் நடுவில் அடிவாரத்தில் உள்ள ஊர் மேவா. 1800 அடி உயரமான அந்த மலை பிரிட்டிஷ் தன் ராணுவ பலத்திற்கென தயார் படுத்திக் கொண்ட்து. ஒரு பெரிய காலாட்படை நிறுவி

நம்மவரின் அப்பா தாத்தா இருவருமே பிரிட்டிஷ் அரசில் ராணுவத்தில் கணக்கு / எழுத்தில் வேலை செய்தவர்கள். அன்றைய பிரிட்டிஷ் அரசு, அரசு வேலையில் இருப்பவரின் குடும்பங்கள் நிச்சயம் நல்ல கல்வி கற்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தது. பிறக்கும் போது நம் பத்தரை மாத்து தங்கத்துக்கு சித்திரையில் குத்திய முத்திரை அந்த குழந்தையின் வாழ்வை பதம் பார்த்தது.
மண்ணில் பிறக்கும் மனிதன் எல்லாம் மலர்கள் தானே. தாய் தந்தை குலம் சொல்லி கீழ் ஜாதி என சமூகம் புறந்தள்ளுவது ஏன். கீழ் ஜாதி நீ என சொல்லி, தீண்டத்தகாதவன் என தீட்டு சொல்லி, ஏதோ தொற்று நோய்க்காரன் மாதிரி விலக்கி வைப்பது எந்த ஊர் நியாயம்.


பிரிட்டிஷ் அரசு, விசுவாசம் தலைமுறை தலைமுறையாய் தளைக்கும் என்று நம்பியதால் படிப்பை வழங்க முடிவு செய்தது, அதுவே இவருக்கு கல்வி தந்தது. இந்த தகவல் கேட்கும் போது ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது ‘ஒரு வாசல் மூடி, மறு வாசல் திறப்பான் இறைவன்’. பிறக்கும் போது அவருக்கு கிடைக்காத குலம் எனும் அட்வாண்டேஜ் அவருக்கு கல்வியாய் படிப்பாய் கிடைத்தது. படிக்கவில்லை என்றால் அவரும் சராசரியாய் ஆயிருப்பார் அல்லவா, தந்தையின் ராணுவ உத்யோகமும், பள்ளி படிப்பும் அவரை அறிஞராக்கியது.
படிப்பு மட்டும் எளிதாகவா இருந்தது.
எத்தனையே சோதனைகள்.... அது கணக்கிட முடியாது, அவர்கள் தீண்டத்தகாதவர்கள், பள்ளியில் சேர்க்க மாட்டேன் என அடம் பிடித்த்து நிர்வாகம். பின்னர் கொஞ்சம் இறங்கி வந்து, சரி போனால் போகட்டும் பள்ளிக்கு வரலாம், வேறு அறையில் உட்கார வேண்டும், உட்காரும் இருக்கையை அவர்களே கொண்டு வந்து கொண்டு செல்ல வேண்டும். பொது இடத்தில் நீர் அருந்த கூடாது, வாத்தியாரிடம் பேசக் கூடாது. சிலேட்டை வாசல் பக்கம் நகர்த்தி வைத்தால் வாத்தியார் பார்த்து வேண்டும் என்றால் திருத்தம் சொல்லுவார் என தனி விதிகள் வகுத்தது.. வகுத்து விதித்தது.
இப்படியும் இருந்திருக்குமா என நம் மனதில் ஆச்சரியம் தோன்றினாலும், இது நிதர்சனமான உண்மையே. நம் நாட்டில் ஒரு 50 வருசத்துக்கு முன் நடந்ததே. உயர் குலத்தில் பிறந்தவர்க்கு தாகமெடுத்தால் வாத்தியாரின் அனுமதி மட்டும் போதும், அதுவே எனக்கு வாத்தியாரின் அனுமதியோடு பியூன் வந்து தண்ணீர் குழாயை துறந்து கொடுத்தால் கை நீட்டி பருகிக் கொள்வேன் என அவர் எழுதும் போது என்னவோ செய்கிறது. "வெயிட்டிங் ஃபார் மை விசா" எனும் அவரது புத்தகத்தில் தந்தையை பார்க்க செல்ல ரயிலில் சென்று புதிய ஊரில் தண்ணீர் கிடைக்காமல் உணவு இருந்தும் பட்டினியாய் கிடந்தது படிக்கும் போது அவரது அவமானம் தாங்கி சாதிக்கும் குணம் புரிகிறது
கிடைக்கும் வாய்ப்பை கெட்டியாக பிடிக்க வேண்டும். எது வேண்டும் என தீர்மானம் செய்ய வேண்டும். செய்து விட்டால், நம் வெற்றி நிச்சயம்.
சாணக்கியர் எடுத்த தீர்மானம் மன்னனையே எதிர்க்க வைத்த்து என்றால், அம்பேத்கர் எடுத்த தீர்மானம் மகாத்மாவையே எதிர்க்க வைத்தது. காலுக்கு செருப்பில்லை என புலம்புவன் காலே இல்லாதவனிடம் பாடம் படிக்க வேண்டாமா. நம் இன்றைய சூழலில் நம்மிடம் என்ன குறை, நம் சமூகம் நம்மிடத்தில் ஏதேனும் காட்டிய பாராமுகம் இருக்கிறதா. இல்லையே பின்னர் ஏன் நம் புலம்பல்கள், எது நம் சாதனையை தள்ளிப்போடுகிறது.
அவமானம் தாங்கி, அடிமனதில் தேக்கி வை. உள்ளுக்குள் தீ வளர், நல்ல நாள் நாளை வரும் எனும் நம்பிக்கையும் வை என்பது அம்பேத்கர் வாழ்வின் சாராம்சம்.
இன்றைய சிந்தனையாய் பழைய சோறு பிரின்ஸிபில் என புதியதாய் நாம் ஒன்று கண்டு பிடித்துள்ளோம்.

பாருங்களேன் ஒரு குண்டா சோறு உள்ள இறங்க ஒரு துணுக்கு காரம் போதுமானது. சரி, நாம் எல்லோருமே எப்போதாவது ஒரு துணுக்கோ அல்லது முழுசாவோ பச்சமிளகாய கடிச்சுருப்போம். அந்த தருணத்தை ஒரு கணம் நினைத்து பாருங்களேன்.

உஸ்... புஸ்... என நாக்கு மூச்சு விடும். கண்கள் தண்ணியா கொட்டும். தண்ணிய கொண்டாங்கடா என மனசு, புத்தி, உடல் எல்லாம் ஆலாய் பறக்கும். தண்ணி வாங்கி குடிச்சு, காரம் குறையும் வரை குரல்வளை நெறியும். வேற எதுவும் மனசுக்கு தோணாது. அடுத்த வீட்டுக்காரன் நம்ம பத்தி என்ன சொன்னான், நான் யோக்கியன் தெரியுமா என நமக்கு நாமே சொரிந்து கொள்ளும் நல்லுணர்வு என எதுவும் தோன்றாமல் தண்ணி மட்டுந்தேன் தோணும்.
ஆம், கடித்த மிளகாய் தான் நம் அவமானம். தேடும் தண்ணீர்தான் நம் அங்கீகாரம். உஸ்ஸும் புஸ்ஸூம் தான் நம் ஒருங்கிணைந்த முயற்சி/ செயல். எவ்வளவு அவமானமோ நம் உயர்வும் அத்தனை உயரும். இன்றைய அவமானம் கண்டு நாம் தளர வேண்டாம், நம்மை செயல்பட வைக்கும் கருவியாய் விசையாய் கொண்டு வேண்டிய படி செல்லும் திடம் கேட்போம்.
(லாரன்ஸ் / ஆர்.கோபி)
வேண்டியபடி வேண்டிய படி எப்பூடி….
தகவலுக்கு நன்றி (Imperial Gazetteer of India v. 17, p. 314)